பிரபல நடிகர் அரவிந்த் திரிவேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி அவர்கள் புகைப்படம் பகிர்ந்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
மிகப்பெரிய இதிகாசத் தொடரான இராமாயணம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த தொடரில் இராவணன் கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகர் அரவிந்த். எதிர்மறை கதாப்பாத்திரமாக இருந்தாலும் தன்னுடைய தனித்திறமையான நடிப்பால் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.
ஹிந்தி மற்றும் குஜராத்தி ஆகிய மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1991-ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் எம்பியாக இருந்துள்ளார். மேலும் திரைப்பட தணிக்கைக் குழு தலைவராக பதவி வகித்துள்ளார்.
நீண்ட நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக நடிகர் அரவிந்த் திரிவேதி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இவரது மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் அரவிந்த் திரிவேதி அவர்களின் மறைவிற்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் அவருடனான புகைப்படத்தை பகிர்ந்து, "சிறந்த நடிகரும், சமூக சேவகருமான அரவிந்த் திரிவேதியை இழந்துவிட்டோம். தலைமுறைகள் கடந்து இராமாயணம் தொடருக்காக மக்கள் நினைவில் என்றும் இருப்பார்" என்று பதிவிட்டுள்ளார்.
Comments
Post a Comment